.comment-link {margin-left:.6em;}

Monday, August 02, 2004

 

என்னைப் பற்றி

பாக்குத்தோப்புகளும், தெண்ணந்தோப்புகளும், பச்சை பசேலென்ற வயல்களும்,மாந்தோப்பும் நிறைந்த, வருடம் முழுதும் தண்ணீர் ஓடும் ஆற்றங்கரையில் அமைந்த அந்த அழகிய தமிழக கிராமம் என் பிறந்த ஊர். கரும்புத்தோட்டமும், நெல் வயல்களும், தோப்புகளும் எனக்கு விவசாயம் என்ன என்று பள்ளிப் பருவத்திலேயே கற்றுக் கொடுத்தன.

அழகிய கோயில்களும் அன்பான மக்களும் பாசத்தை , நேசத்தை, எம்மதமும் சம்மதம் என்பதை, சகோதரத்துவத்தை என் மனத்தில் செதுக்கின.

( இந்த அறுபது  ஆண்டுகளில் இவையெல்லாம் எங்கே மறைந்தன?).

கிராம பள்ளியும் அரசு நூலகமும் எனக்கு கல்கியையும் , பாரதியையும், மணியனையும் , சான்டில்யனையும் அறிமுகப்படுத்தின. வந்தியத்தேவனையும், குந்தவைப் பிராட்டியையும் இன்றும் நிணைவில் நிறுத்திய கல்கி சித்தரித்த அத்தனை ஊர்களுக்கும் ( தமிழகத்தில் மட்டும்...இலங்கை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.) பயணித்து, ராஜராஜ சோழன் காலத்தை அறிந்து கொள்ள முயன்றது தனி கதை.

பள்ளிப் படிப்பின் போதே விவசாயத்தையும், வியாபாரத்தையும் தந்தை கற்றுத்தந்தார். என் தந்தையிடம் நான் மேலும் கற்றுக் கொண்டது நாணயத்தையும், வாக்கு தவறாமையும். என் தாயிடம் கற்றுக் கொண்டது பிரதி பலன் எதிர்பாராத குடும்பத்தினர் அனைவருக்குமான கடுமையான உழைப்பு.

கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தபிறகு முழுமையான ஒரு மாற்றம். சூழலில், மணிதர்களில்...எண்ணங்களில்...

கல்லூரிக்குப்பின், மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் கருங்கல் சுரங்கம் ஆரம்பித்து இத்தாலிக்கும், ஜப்பானுக்கும் ஏற்றுமதி..அயல் நாட்டவரைச் சந்திக்கும், பழகும் வாய்ப்பு. இந்திய ரயில்வே, சென்னை துறைமுகம், டி.பி.மதன் அன் கோ ( கப்பல் கம்பெனி ஏஜெண்டு) ரஸ்ய கப்பல் மாலுமிகள் மறக்க முடியாதவை.

திருமண வயது வந்தது. உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்குதான் கிராக்கி. ஏற்றுமதி தொழிலை இறக்கி வைத்துவிட்டு வங்கியில் பணி. கலெக்டர் வீட்டுப் பெண் மணைவியானாள்.

எனக்கு வந்த மணைவி என் முன்னேற்றத்திற்கு ஊட்டச்சத்து. என் மாமனார் எனக்கு ஆண்மீக குருவானார். எனக்கு முழு ஞானம் கிடைப்பதற்குள் அவர் அமரரானார். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டமும் முந்தயதற்கு முற்றிலும் மாருபட்டு..இது ஒவ்வொன்றும் தான் ஒரு பிறவியா..ஏழு பிறவி என்று இதைத்தான் சொல்கிறார்களா.

இந்த காலகட்டத்தில் கணினி இந்தியாவிற்குள், வங்கிக்குள், என் வாழ்க்கைக்குள் நுழைகிறது. எனக்கு எவ்வெப்போது எது எது எவ்வளவு தேவையோ அதை கிடைக்கச்செய்யும் சக்தி எது. இறையருள் என்பது இதுதானா?

கணினி என் வாழ்க்கையில் இதுவரை யில்லாத ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுத்து,  
எண்பதுகளின் பின்பகுதியில் இந்திய வங்கிகளில் 'மேம்படுத்திய பேரெடு பதியும் எந்திரம் (ALPM) என்ற போர்வையில் கணினி நுழைகிறது .  அன்றைய தொழிற்சங்கங்கள் அவ்வாறுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அகில இந்திய அளவில் வங்கியின் அனைத்து பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களைக்  கொண்டு ஆரம்பிக்கப் பட்ட கணினி பிரிவில் நானும் இடம் பெற்றேன் .  ஐந்து ஆண்டுகளில்  வங்கி கணினி மயமாக்கம் அனைத்து பிரிவுகளிலும் வந்துவிட்டது. 

அப்போதுதான் என்னோடு வேலை செய்தவர்கள் அமெரிக்கா , ஐரோப்பா என்று பணி நிமித்தம் சென்றுவிட, நான் வளைகுடாவில் சவுதியில் ஒரு பிரெஞ்ச் வங்கியில் சேர்ந்து இன்று வரை என பணி தொடர்கிறது.  கூடவே தமிழ்ப் பணியும். 


அன்புடன்..


மு.வெற்றிவேல்.

This page is powered by Blogger. Isn't yours?