.comment-link {margin-left:.6em;}

Wednesday, October 04, 2017

 

S Ve Shekar on Harvard Tamil Chair ஹார்வர்ட் தமிழ் இருக்கை


Saturday, February 14, 2015

 

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்





திருஞானசம்பந்தர் அருளிய
கோளறு திருப்பதிகம்






வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றோடு ஏழுபதி னெட்டோடு ஆறும் உடனாய நாட்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து மறையோது மெங்கள் பரமன்

நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்


அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே


வாள்வரி அதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்

நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவை யோடுகொலை யானை கேழல் கொடுநா கமோடு கரடி

ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடு முடனாய்

வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடு மிடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



பலபல வேட மாகும் பரன்நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடு எருக்கும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்வரு காலமான பலவும்

அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே



தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னிவளர் செம்பொன் எங்கும் திகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே




 

தமிழைக் காப்பாற்றுவோம்

 

நம் தலைமுறையில் இல்லாத இணைய வசதி தற்போது இருக்கிறது.

 

இன்றைய இளைஞர் இதைப் பயன் படுத்தி நம் தமிழ் மொழி காப்பாற்றப் பட இயன்றதனைத்தும் செய்யட்டும்.

 

வாழ்த்துக்கள்

தமிழ் வாழ்க. தமிழ் மொழி வளம், தமிழ் புதினங்கள் வளர்க.

 

அன்புடன்

மு.வெற்றிவேல்


Tuesday, October 14, 2008

 

சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி

ரூ 60 கோடி பணப்புழக்கத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி.சந்தை சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி
"போதிய பணப்புழக்கம் இல்லாததே தற்போதைய பிரச்னைக்கு காரணம். பணப்புழக்கத்தைச் சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது." - மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை.

[ பணவீக்கம் 11.80 சதம் என்பது அடுத்த பத்தி செய்தி. இது பிற உலக நாடுகளை விட மிக மிக அதிகம்.]
-- தினமலர் செய்தி
பங்கு சந்தை சரிவிற்கு இவ்வளவு அதிரடி நடவடிக்கை தேவையா? இதன் மூலம் யாரைக் காப்பாற்ற மற்றும் யாரை ஓட்டாண்டியாக்க இந்த முடிவு.
பங்குகளின் விலை அந்தந்த நிறுவனங்களின் உண்மை உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு இருந்தால் இந்த சரிவு ஏற்பட்டிருக்குமா. ஊக வணிகர்களின் குறுக்கு வழி லாபத்திற்காக ஏரிய விலை இறங்கினால் யாருக்கு இழப்பு? எந்த நிறுவங்களின் பங்குகள் வீழ்ச்சியுற்றன, எந்த நிறுவனங்களின் பங்குகள் அவ்வளவாக பாதிக்க வில்லை என்ற விரிவான ஆரய்ச்சி செய்ய வேண்டாமா?
இந்த நிலையில் கவர்ச்சி காட்டி சாமாண்யர்களை பங்குச் சந்தைக்குள் இழுக்கும் முயற்சிதானே இந்த பணப் புழக்க அறிவிப்பு.
நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்காதா? அதிகரிக்கப்பட்ட பணப்புழக்கத்தால் ஏறபடப் போகும் விலை ஏற்றத்தால் பாதிக்கப் படப் போவது யார்.
நாட்டின் உள் கட்டமைப்பு வசதிக்காகவோ, விவசாயமும் தொழிசாலைகளும் எதிர்கொள்ளும் மின்வெட்டு போன்ற பிரச்னைக்கு ஏன் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் இல்லை.
இந்தியத் திருநாடும், சாமாண்ய இந்தியனும் எக்கேடு கெட்டால் என்ன.

பங்குகளின் விலையை அந்தந்த நிறுவங்களின் உண்மை லாபத்திறனுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் உயர்த்தி விளையாடி பணம் பண்ணும் மோசமான வியாபாரிகள், சுய லாபத்திற்காக இதற்காகத் துணை போகும் நிறுவன முதலீட்டு-மேலாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் காப்பாற்றுவதுதான் இன்றைய அரசின் முக்கியப் பணியாக இருக்கிறது.
பாவம் சாமாண்ய இந்திய மக்கள்

Labels:


Monday, April 21, 2008

 

பாரதிதாசன் விழா

தமிழ்-உலகம் பாரதிதாசன் விழா கொன்டாடுகிறது.

tamil-ulagam@yahoogroups.com

Labels:


Saturday, May 20, 2006

 

நாட்டுப் புறப் பாடல்

தமிழ் வளர்ந்தது, வளர்வது, வாழ்வது எப்படி யென்று கேட்டால், தமிழருக்கே உரித்தான கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் ஒரு காரணம் என்று பதில் சொல்லலாம்.

வாய்மொழியாக வந்த நாட்டுப் புறப் பாடல்களில் இவை ஏராளம்.
என் தாயாருக்கு அவருடைய பாட்டி மூலம் சொல்லப்பட்ட பாடல்கள் பல. இந்தப் பாடல்களின் சுவை வியந்து அவற்றை இன்றைய நாட்டுப்புற பாடலாராய்ச்சியாளர் ஒருவர் தன் பாடல் தொகுப்பில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

மாதிரிக்கு ஒன்று இங்கே.

முல்லு முணை மேலே மூணு குளம் வெட்டி வைத்தேன்
ரெண்டு குளம் பாழ், ஒண்ணு தண்ணியே இல்லை

தண்ணியில்லாத குளத்துக்கு வந்த கொசவன் மூணு பேரு
ரெண்டு பேரு நொண்டி, ஒருத்தனுக்கு கையே இல்லை

கையில்லாத கொசவன் பண்ணுனது மூணு சட்டி
ரெண்டு சட்டி பச்சை, ஒண்ணு வேகவே இல்லை

வேகாத சட்டியில போட்டதுதான் மூணு அரிசி
ரெண்டரிசி பச்சை, ஒண்ணு வேகவே இல்லை

வெகாத சோத்துக்கு விருந்தாளி மூணு பேறு
ரெண்டு பேரு பட்டிணி, ஒருத்தன் திண்ணவே இல்லை

திண்ணாத விருந்தாளிக்கு விட்டதுபார் மூணு எருமை
ரெண்டெருமை கொட்டு, ஒண்ணு ஈணவே இல்லை

ஈணாத எருமைக்கு விட்டதுவோ மூணு காடு
ரெண்டு காடு சொட்ட, ஒண்ணு பில்லே இல்லை

பில்லில்லாத காட்டுக்கு கந்தாயம் மூணு பணம்
ரெண்டு பணம் சொல்லை, ஒண்ணு செல்லவேயில்லை

செல்லாத பணத்துக்கு கணக்குப் பிள்ளை மூணு பேரு
ரெண்டு பேரு நொல்லை, ஒருத்தனுக்கு கண்ணே இல்லை

கண்ணில்லாத கணக்குப்பிள்ளைக்கு பொண்டாட்டி மூணு பேரு
ரெண்டு பேரு மொட்டை, ஒருத்திக்கு முடியே இல்லை.

---இதுதான் அன்றைய காணா பாடலா? ( வாலமீணுக்கும் வலங்கை மீணுக்கும் கல்யாணம்...னு யாரோ முணுமுணுக்கரமாதிரி இருக்கு)

அன்பன்,


மு.வெற்றிவேல்

Friday, April 14, 2006

 

இனிய விய வருஷத்திய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இனிய விய வருஷத்திய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

விய வருஷம்

இதற்குச் சரியான பிற வருஷங்கள்.

கலியுகாதி 5108
திருவள்ளுவர் 2037
ஆங்கிலம் 2006
பசலி 1415
ஹிஜ்ரி 1427


தமிழ் கல்வெட்டுகளில்/ஓலைச்சுவடிகளில் சொல்லப்பட்ட யுகங்களின் வருஷங்கள்

கிருதாயுகம் - 17,28,000
திரேதாயுகம் - 12,96,000
துவாபரயுகம் - 8,64,000
கலியுகம் - 4,32,000
--ஆதாரம்: விய வருஷத்திய வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் ..பக்கம்..17,

சும்மா ஒரு பேச்சிற்கு கிருதாயுக ஆரம்பத்தில் தமிழ் பிறந்ததாக வைத்துக் கொண்டாலும்
தமிழ் முப்பத்தியெட்டு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து நூற்றி ஏழு ஆண்டு முடிந்து முப்பத்தியெட்டு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து நூற்றி எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஒரு சிலர் தமிழராயிருந்தும் தமிழ் பேச மறுப்பினும்,
ஒரு சில தமிழ் சந்ததிகள் தமிழை ஒதுக்கினும்
தமிழ் வாழும், லட்சோப லட்ச வருடங்களுக்கும், அதற்கு மேலும்.

தமிழின் வயதைப் பார்க்கும் போது
'வாழ்க தமிழ்' என்று வாழ்த்தும் வயது
எனக்கிருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறதெனக்கு.
வணங்குறேன் தமிழே
தமிழரை விட்டு
நீங்காதே நீ என்று.

அன்பன்

மு.வெற்றிவேல்

Tuesday, March 28, 2006

 

நான் பெற்ற/உணர்ந்த விளக்கம் -2

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

நேர் விளக்கம்

நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

எல்லோரும் உணர்ந்த விளக்கம்.
உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.

கல்லைக் கண்டால் நாயகனை காணோம்! நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!!" என்பதுதான் "நாயகன்(இறைவன்)" = நாய் ஆக மறுவியாதகவும் ஒரு கூற்று உண்டு.

நான் பெற்ற/உணர்ந்த/புதைந்துள்ள விளக்கம்

கல்லால் செதுக்கப் பட்ட ஒரு நாய் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே நாயை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் நாயாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

இங்கே புதைந்துள்ளது எளிமைப் படுத்தப் பட்ட மந்திரம்.

மூல மந்திரம்...திருமூலர் சொன்ன திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

- திருமந்திரம்

தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.

யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை.

இப்படித்தான், இவ்வுலகை, உலகமாகப் பார்க்கும் மனிதனுக்கு, உலகை இயக்கும் பரம் பொருள் தெரியவில்லை.

உலகையே (அதற்குக் காரணமான) பரம் பொருளாகப் பார்ப்பவனுக்கு உலகம் தெரிவதில்லை.

 

நான் பெற்ற/உணர்ந்த விளக்கம் -1

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"

நேர் விளக்கம்

காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)

எல்லோரும் உணர்ந்த விளக்கம்.
சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

நான் பெற்ற/உணர்ந்த/புதைந்துள்ள விளக்கம்

1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

This page is powered by Blogger. Isn't yours?